Thursday, April 23, 2009

உள்ளிருந்து ஒரு குரல்

மன்னாரில் இருந்து கொஞ்சமாக தமிழர் நிலங்களை விழுங்கிக்கொண்டு மல்லாவி வெள்ளாங்குளம் வரையும் வந்திருந்த சிறிலங்காப் படையினருக்கு மூக்கை நீட்டிக்கொண்டிருந்த வவுனியா பாலமோட்டை குஞ்சுக்குளம் பகுதிகளிலிருந்த விடுதலைப் புலிகளின் நிலைகள் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது.

எப்பாடுபட்டாவது அடித்து உடைத்துக்கொண்டு மல்லாவியில் நிற்கும் தமது அணிகளுடன் தொடர்பை ஏற்படுத்தியே ஆகவேண்டும் என்ற நிலை சிறிலங்காப் படைகளுக்கு. பல வழிகளால் முட்டி மோதியும் அவை வெற்றியளிக்கவில்லை என்றாலும், அவர்கள் விடுவதாயில்லை. அதி உச்ச சூட்டு வலுக்களைப் பயன்படுத்தி உடைப்புக்களை ஏற்படுத்தப்ப படாதபாடு பட்டுக்கொண்டிருந்தனர்.

‘முடியுமானால் வந்து பார். எங்கள் வித்துடல்களைத் தாண்டியல்லாது நாமிருக்கும் வரையும் முடிந்தால் வந்துபார் பார்ப்போம்: என்று உறுதியுடன் காத்திருந்தனர் பெண்புலிகள் லெப்.இளமதியின் காப்பரணில் தான் தாரணியும் லெப்.தமிழ்மகளும் நின்றிருந்தனர். கடந்த ஆறுமாதங்களாக பழக்கப்பட்டுப்போன களமுனை என்பதனால் புளியங்குளம் தொடங்கி குஞ்சுக்குளம் வரையும் இவர்களுக்குத் தண்ணிப்பட்ட பாடம்.

அவர்கள் குளித்துப் பல வாரங்களாகிவிட்டன. அன்று நிலைமையைப் பார்த்துக்குளிக்க விடுவதாகப் பிளாட்டூன் முதல்வி மேஜர் சிவா கூறியிருந்தார். அரசியல்துறை மகளிர் அணி தாக்குதலணிப் போராளிகளின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரியவள் சிவா. இருந்தாலும் அன்று அவளால் அவர்களைக் குளிக்கவிடமுடியாமல் போய்விட்டது. அந்த முன்னணி நிலை புற்கள் நிறைந்த வெட்டை வெளி. காப்புகளென்றால் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் சில மரங்கள் இருந்தன.

காலாற நடந்துபோக எண்ணினால் அவர்கள் கட்டாயமாக குறிசூட்டுக்கோ, எறிகணைகளுக்கோ இலக்காக வேண்டியதுதான. அன்று காவற்கடமையில் நின்ற தாரணி படையினரின் நகர்வினைக் கண்டுவிட்டாள். அங்கிருந்து பீ.கே.எல்.எம்.ஜீ சுடுகலன்கள் ரவைகள், உந்துகணைகள், எறிகணைகள் என்று வலுவான சூடுகள் வர, இங்கிருந்தும் ரவைகளும் எறிகணைகளும் சீறிப்பாய்ந்தன.

முக்கால் மணிநேரம் மூர்க்கமாக முன்னேற முயன்ற சிங்களப் படைகளைத் தமக்கேயான தற்துணிவுடன் எதிர்த்து நின்றனர். புலிப்படைகள் இறுதியில் இளமதியின் நிலையைக் கைப்பற்ற முடியாமல், அவர்களின் குறிக்கும் கனவில் மண்ணைப் போட்டுவிட்டுப் பின்வாங்கிவிட்டனர் சிறிலங்காப் படையினர் வந்த இரண்டு நாட்களும் அமைதியாகக் கழிந்தது. கிடைத்த ஓய்வைப் பயன்படுத்தி அணிகளைக் குளிக்கவிட எண்ணி ய சிவா, அவர்களை மாற்றிவிட மதுமதியின் அணியினை அனுப்பினாள். இளமதியிடம் காவலரணைப் பொறுப்பேற்றுக்கொண்ட மதுமதி அவர்களைக் குளிப்பதற்கு அனுப்பினாள் மதுமதி இருக்கும் இடம் எப்பொழுதுமே கலகலப்பான தாகவே இருக்கும்.

ஒளிப்படப்பிரிவில் இந்து களப்பிடிப்பாளராகப் பல களங்கள் சென்று வந்தவள் இங்கே ஒரு காவலரண் முதல்வியாகச் செயற்பட்டுக்கொண்டிருந்தாள். எந்த இறுக்கமான களமுனைகளிலும் இயல்பாக நிதானமாக இருந்து செயற்படுவது இவளின் சிறப்பியல்பு. குளிக்கச் சென்ற அணியும் அவர்களுக்கான ஆடைகளைத் தலைமை மையத்திலிருந்து எடுத்து வந்த செந்தாவின் அணியும் சந்தித்துப் பொருட்களைப் பரிமாறிக்கொள்ளும் அந்த நேரம் மதுமதியின் காவலரணில் சண்டை தொடங்கிவிட்டது. நிலைமையைப் புரிந்து கொண்ட சிவா சிறு அணியொன்றுடன் அவ்விடத்துக்கு விரைந்தாள். பாதுகாப்பான காப்புகளில் அனைவரையும் பிரித்து விட்டுவிட்டுத் தானும் ஒரு மரக்காப்புடன் நின்று கட்டளைகளை வழங்கிக் கொண்டு சண்டையிட்டாள்.

அந்த நேரம் சிவாவைக் குறிவைத்து ஏவப்பட்ட உந்துகணை சீறிவந்து வெடிக்க, அவளையும் காப்பரணையும் கைப்பற்றிவிடவேண்டும் என்ற முனைப்போடு எதிரிப்படைகளும் இரண்டையும் விடக்கூடாது என்ற உறுதியுடனும் சண்டையைத் தானே வழிநடத்த வேண்டும் என்ற பொறுப்புடனும் மதுமதி அணிகளை வைத்துச் சண்டையிட்டுக்கொண்டிருந்தாள். கைவசமிருந்த வெடிப்பொருட்களும் முடியும் நிலை. விழுப்புண்ணடைந்தவர்களின் சுடுகலன்களையும் வைத்துக்கொண்டு ஒவ்வொரு ரவையாகப் பார்த்துப் பார்த்து தேனெழில் சுட்டுக்கொண்டிருக்க, எந்தப் பதட்டமும் இல்லாமல் ‘மிக்சரை' மென்றபடி நிலைமையைக் கட்டளை மையத்துக்குத் தெரியப்படுத்திக்கொண்டிருந்தாள் மதுமதி.

வல்வளைப்பாளர்களின் ரவைகளும் உந்துகணைகளும் எறிகணைகளும் மழையாகப் பொழிந்து கொண்டிருந்தன. அந்தக்குண்டு மழைக்குள்ளும் இன்னுமொரு அணியினரால் இடையில் கொண்டுவந்து கொடுக்கப்பட்ட வெடிபொருட்களுடன் சிவாவின் வித்துடலையும் தமது காவலரணையும் விட்டுவிடக்கூடாது என்றஉறுதியுடன் ஆண் போராளிகளின் சிறிய அணியொன்றுடன் முன்னேறினர் இளமதியின் அணியினர். காவலரணில் இருந்து சில மீற்றர் தூரத்திலேயே தமிழ்மக்களும் இளமதியும் வீரச்சாவடைய, ஏனையோர் விழுப்புண்ணடைந்து வீழ்ந்தனர். விழுப்புண்ணடைந்தவர்களால் நகரமுடியவில்லை.

கையைத்தூக்கினாலோ, புல் அசைந்தாலோ ரவைகளும் எறிகணைகளும் அவ்விடத்தைக் குதறிவிடும். காவலரணைத் தக்க வைப்பதோடு வித்துடல்களையும் விழுப்புண் அடைந்தவர்களையும் அனுப்பவேண்டிய பொறுப்பும் மதுமதியினுடையது. அனால் வெடிபொருட்கள் வரும்வரையும் அவர்களால் தற்காப்புச் சூடுகளை மட்டுமே வழங்கமுடியும். குந்தியிருந்து கட்டளை மையத்துடன் தொடர்பை மேற்கொண்டிருந்த மதுமதியின் காலுக்குக் கீழ் எதிரியால் எறியப்பட்ட கையெறி குண்டு ஒன்று வந்துவிழுந்து வெடிக்க அவளும் விழிமூடிப்போக, கடுமையாக விழுப்புண்ணடைந்த தாரணியும் தேனெழிலும், மாமகளும் ஏனைய ஆண் போராளிகளும் ஊர்ந்து பின்னால் வந்து சேர, அந்தக் காவலரண் எதிரிப்படைகளிடம் விழுந்து போனது.

செந்தா அரசியல்துறை மகளிர் தாக்குதல் அணியின் மருத்துவப்போராளி. தேடுதல் அணியின் ஒருவராகத் தனது மருத்துவப் பையுடனும் கையெறி குண்டுகளுடனும் அவளை அதிகமாகக் காணலாம். அவளுக்கு ஓய்வு என்பதே இருந்ததில்லை. தனக்கு வழங்கப்பட்ட பணிக்கும் மேலாக முன்னணி நிலைகளுக்கு அவசரமாக வெடிபொருட்கள் வழங்கவேண்டுமா? உடனே முன்வருவாள். உணவு - தண்ணீர் வழங்கவேண்டுமா? நேரம் காலம் தேவையில்லை செந்தாவுக்கு உடனே புறப்பட்டுவிடுவாள். அது புதூரின் காட்டுப்பகுதி. சிறிலங்காப் படைகளின் ஆழ ஊடுருவும் அணியினரின் அமுக்க வெடிகள் அடிக்கடி முழங்கும் பகுதி. அன்றும் காலையே அமுக்கவெடித்தொகுதியொன்று வெடித்தனால் அன்றைய நாள் உணவு மாலையே வந்துசேர்ந்தது. முன்னணி நிலைக்கான உணவுகளை வழங்கும் பொறுப்பு செந்தாவிடம் விடப்பட்டது. அவளுக்குத்தான் அந்தப் பாதைகள் அத்துப்படி. ஒன்பது பேர் கொண்ட அணி புறப்பட்டது.

அதில் முதலாவது ஆளாக செந்தா செல்ல, அவளுக்குப் பின்னால் குறிப்பிட்ட தூரம் இடைவெளி விட்டு ஏனையவர்கள் நகர்ந்துகொண்டிருந்தனர். சிலகாவலரண்களுக்கு உணவு வழங்கப்பட்டுவிட்டது. இன்னும் சல காவலரண்களுக்குத்தான் வழங்க வேண்டும். அணி அடுத்த காவலரண்நோக்கி நகரத் தொடங்கியது. சடுதியாக மிக அருகில் வெடித்த அமுக்கவெடியால் தூக்கி எறியப்பட்ட செந்தா, நிதானித்துக்கொண்டு சுடுவதற்காகத் தனது சுடுகலனைத் தூக்கினாள்.

ஒருகை இயங்க மறுத்தது. அப்போதுதான் விழுப்புண்ணடைந்திருப்பதை அறிந்துகொண்ட செந்தா திரும்பிப் பார்த்தாள் எவரையும் காணவில்லை. கூப்பிட்டுப் பார்த்தாள் சத்தமில்லை. மெல்லப் பின்நோக்கி நடக்கத்தொடங்கினாள். இடையில் காலில் விழுப்புண்ணடைந்த நிலையில் ஒரு ஆண்போராளி கிடந்தார். ஆனால் செந்தாவால் அந்தப்போராளிக்கு உதவமுடியாதநிலை. உதவி அணியைக் கூட்டிவருவதாகக் கூறிவிட்டு நகர்ந்தவளை சம்பவ இடம்நோக்கி அணியுடன் வந்துகொண்டிருந்த கொம்பனி பதில்முதல்வி குயில் கண்டுகொண்டார். செந்தாவைப் பாதுகாப்பாக அனுப்பிவைத்துவிட்டு, அவளின் தகவலின்படி சம்பவ இடத்தையும் சுற்றுப்புறச் சூழலையையும் தேடுதல் செய்த குயிலின் அணி விழுப்புண்ணடைந்தவர்களை மீட்டு வந்தது.

சிறிலங்காப் படையினரின் அமுக்கவெடித் தாக்குதல்களுக்கும் பதுங்கித் தாக்குதல்களுக்கும் பெயர்போன இடம்தான் குஞ்சுக்குளம் நவ்விப்பகுதி. அங்குதான் அரசியல்துறை மகளிர் தாக்குதலணியும் ஒரு பகுதியைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. பிளாட்டூன் பதில் முதல்வி கப்டன் கவிப்பிரியாவுடன் சுடர்மதி, முல்லை கதிரினி, சில ஆண் போராளிகள் என்று தமது கடமைகளுக்காகச் சென்றுகொண்டிருந்தனர். ஆறுகள் நிறைந்த வவுனியாக் களமுனையில் இவர்களும் அருகருகே இருந்த இரண்டு ஆறுகளைக் கடந்தே செல்லவேண்டும். பாதிப்பேர் முன் ஆற்றையும் மீதிப்பேர் பின் ஆற்றையும் கடக்க முற்பட்டனர். முன்னால் சென்ற கப்டன் கவிப்பிரியாவுக்கு சிங்களப் படையினரின் மணம் மூக்கினுள் நுழைந்ததோ என்னவோ அணிகளுக்குச் சைகை காட்டி நிலையெடுக்கச் செய்யவும், பதினைந்து இருபது மீற்றர் இடைவெளித் தூரத்தில் உருமறைப்புடன் அமைந்திருந்த நிலையிலிருந்து அவர்களின் சுடுகலன்கள் அவர்களைக் குறிவைத்துக் குண்டுகளைத் துப்பத்தொடங்கின.

கணப்பொழுதில் சமாளித்துக்கொண்ட கப்டன் கவிப்பிரியாவின் அணியினரும் தமது சுடுகலன்களால் தாக்க, வனம் அதிர்ந்தது. சுடர்மதியும், முல்லையும் ஆண்போராளி ஒருவரும் பின் ஆற்றுக்குள் நிலையெடுக்க அணி இரண்டாகப் பிரிந்துவிட்டது. வேகமாக முடிவெடித்துச் செயற்பட்டாள் முல்லை. கையெறி குண்டுடன் மாத்திரம் வந்திருந்த ஆண் போராளியைத் தங்களுக்குப் பின்னால் வரும்படி கூறிவிட்டு. சுட்டுக்கொண்டு முன்னேறி முன்னேறி அணியுடன் இணைந்துகொண்டனர் முல்லையும் சுடர்மதியும். அணிகளை ஒருங்கிடைத்துக் கொண்டு தாக்குல்களைக் கொடுத்துக்கொண்டே தமது பாதையை மாற்றிப் பயணத்தைத் தொடர்ந்தனர் கப்டன் கவிப்பிரியாவின் அணியினர்.

உலகமங்கை

Dec 28, 2008

உள்ளிருந்து ஒருகுரல்


முள்ளிக்குளம் போர் முன்னரங்கிலிருந்து சில மீற்றர்கள் முன்னதாக தனது முன்னணி அவதானிப்பு நிலையை அமைத்திருந்தனர் படையினர். எதிரியை ஈர்க்கக்கூடிய ஆட்டங்கள், அசைவுகள் ஏதுமற்று இயற்கையோடு ஒன்றித்து முடியரசியின் அணி பதுங்கிக் கிடந்தது. எதிரியைப் பார்த்துக் கிடந்தது. வேவுப் பணியை ஒத்த முதன்மையான பணி அது.

அவர்களில் இருவரைக் காண அவர்களின் பெற்றோர் கேட்டிருந்தனர். முள்ளிக்குளம் போர் முன்னரங்கிலிருந்து ஒருவர் பின்னகர்வது சின்ன விடயமல்ல. அவரை மாற்ற ஆட்கள் வரவேண்டும். பின்னே போகப் போவது ஒருவராயினும் இருவராயினும், போகவுள்ள பாதையின் பாதுகாப்பை ஒரு அணி தேடுதல் செய்து உறுதிப்படுத்தவேண்டும். வழியில் பகைப் படையினரின் அமுக்கவெடிகளைப் பாய்ந்து கடந்து, சண்டை வந்தால் சண்டை பிடித்து, விழுப்புண்ணடைந்தோரைச் சுமந்து, வித்துடலாக வீழ்ந்தோரைச் சுமந்து, பெருந்தொலைவுவரை நடந்துதான் போர்க்களத்தைவிட்டு வெளியேறமுடியும்.

அப்போது முழங்காவிலில் இருந்த 2ஆம் லெப்.மாலதி படையணியின் மக்கள் தொடர்பகத்துக்கு வரப்போகும் பெற்றோரைக் காண வர ஒருநாள், சந்திக்க ஒரு நாள், மறுபடியும் போய்ச்சேர ஒரு நாள் என மூன்று முழு நாட்கள் பிடிக்கும். மூன்று நாட்களும் இரு போராளிகளின் பணியை முடியரசி வெற்றிடமாக விடமுடியாது. எனவே மாற்றிவிட ஆட்கள் வந்தனர்.

முறியடிப்பு அணியிலிருந்து வினோதா, திசையருவி, அகிலானி மூவரும் வந்தனர். இவர்கள் வந்தபின் அவர்கள் போயினர். பெற்றோரைக் கண்டனர். இதோ இன்று அவர்கள் திரும்பி வருகின்றனர். முடியரசி யின் அணியிலிருந்தும் வேறு அணிகளி லிருந்தும் பெற்றோரைக் காணச் சென்ற வர்கள் ஒரு அணியாக, தேடுதல் செய்தபடி கொம்பனிப் பொறுப்பாளர் புகழரசியின் கட்டளை மையத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் தகவல் பகுதிக் கட்டளை அதிகாரி செங்கோல் அவர்களால் புகழரசிக்குச் சொல்லப்பட்டது. அந்த அணியின் கண்ணெட்டும் தொலைவில் புகழரசியின் கட்டளை மையம் தெரிந்த வேளை சிங்களப் படையினரின் தாக்குதலை அந்த அணி சந்தித்தது. போர் முன்னரங்கின் பின்புறம், கட்டளை மையத்தின் பின்புறம் சண்டை தொடங்கியது.

முன்னணி அவதானிப்பு நிலையின் முன்புறம் ஒரு குவியலாகச் சிங்களப் படையினர் வருவதை அதில் நின்றவர்கள் கண்டனர். சண்டையைத் தொடங்கினர். வினோதாவுக்கு இதுவே முதற்சண்டை.(இச் சண்டையின் முழுமையான விரிப்பு 2008.07.25 அன்றைய ‘உள்ளிருந்து ஒரு குரல்' இல் உள்ளது.)பின்புறமும் முன்புறமும் சுற்றிவளைத்து சிங்களப் படையினர் செய்த முற்றுகையை முறியடிக்கும் முயற்சியில் புகழரசியின் வழிநடத்தலில் அணியின் முன்னணியில் திசைகாட்டி யுடன் நகர்ந்த முடியரசியும் கூடச் சென்ற ஆண் போராளி பாசறையும் சிங்களப் படையினருடனான மோதலில் வீரச்சாவடைய, இப்போது அணியின் முன்னணியில் திசைகாட்டியோடு வினோதா.

தமிழீழ தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களை ஒருபோதும் நேரடியாகக் கண்டிராத வினோதாவை, அவரைப் பற்றிய பாடல் ஒன்று வழிநடத்தியது.

"அண்ணன் சொன்ன வேதம்

என்ன சொல்லு சொல்லு சொல்லு சொல்லு

முயன்றிடு பாதைகள் எப்போதும்

திறக்கும் இல்லையேல்

அவைகள் மூடியே கிடக்கும் என்றார்

இன்னும் அதிகமுண்டு.

தூரமென்று ஏதுமில்லை

பாரம் என்ற சொல்லே இல்லை

ஏலாதென்றால் சேரும் தொல்லை

போராடென்றான் போராடென்றான்"

(நன்றி - பாடல் தமிழவள்)

வினோதாவை வழிநடத்திய பாடல் எல்லோரையும் வழிநடத்தட்டும்.

------------------------------------------------

கோயில் மோட்டையில் போர் முன்னரங்கை இளங்கிளையின் கொம்பனி அமைத்து நின்ற காலம் இது. செவிப் புலனுக்கும் எட்டாத இடைவெளிகளோடு, இயற்கை மறைப்புகளைப் பயன்படுத்தி, குளிப்பு, முழுக்கை அறவே மறந்து, உடன் சமைத்த உணவு பற்றிய சிந்தனை இன்றி இளங்கிளையின் கொம்பனி காவல் நின்றது.

முன்னே பெயர் சூட்டப்பட்ட சிங்களப் படைப்பிரிவுகள், பின்னே பெயர் சூடாத அமுக்கவெடி தாங்கிய சிங்களப் படையினர் என்று எந்நேரமும் தீ மூளக்கூடிய சமர்க்களம் அது. சிறிலங்காவின் வரை படத்தில் கோயில்மோட்டை என்று குறிப்பிடப்படும் அவ்வூருக்குத் தமிழீழப் போர் வீரர்கள் சூட்டிய செல்லப் பெயர் கிளைமோர் மோட்டை.

அந்தக் கோயில்மோட்டையில் முறியடிப்பு அணியாகக் கீதவாணியோடு வினோதா, செவ்விழி முதலானோர் நின்றனர். அன்று சுடரிசையின் பிளாட்டூனிலிருந்து இருவர் தமது பெற்றோரைக் காண்பதற்காக முழங்காவிலை நோக்கிய இடர் மிகு பயணத்தைத் தொடங்க இருந்தனர். போக வேண்டிய இருவரும் பிளாட்டூன் முதல்விக்கான காப்பரணில் நிற்பவர்கள். இவர்களை மாற்றிவிட வினோதாவும் செவ்விழியும் வந்தனர்.

வந்திறங்கியவர்களிடம் போகவேண்டியவர்கள் ஒரு தகவலைச் சொன்னார்கள். அன்று காலை அவர்களின் காப்பரணின் முன்புறம் அமுக்க வெடி ஒன்று கைப்பற்றப்பட்டதால், விழிப்போடு இருக்கும்படி எச்சரித்தனர். வந்தவுடனேயே வினோதா காவற்கடமையைப் பொறுப்பேற்றார். செவ்விழி வேறு சிலருடன் தண்ணீர் அள்ளிவரப் போய்விட்டார். வலம், இடம் உள்ள காப்பரண்களைப் பார்வையிடவோ, காப்பரண் முதல்விகளுடன் அறிமுகம் செய்துகொள்ளவோ நேரமிருக்கவில்லை.

நின்று அவதானிக்கமுடியாத அடர்காடு அது நிலத்தில் இருந்தால் அடி மரங்களிடையே ஓரளவு கவனிக்கலாம். திறந்த அகழியைக் கொண்ட காவலரணின் முன்புறமாக சில மீற்றர்கள் முன்னே மரமறைவில் அமர்ந்து காவல் செய்த வினோதாவை சில சத்தங்கள் ஈர்த்தன. யார் யாரோ நடக்கும் ஓசை, சருகுகள் மிதிபடும் ஒலி, மொழி பிரித்தறிய முடியா ஆண் குரல்கள் எல்லாவற்றையும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.தண்ணீர் அள்ளப் போனபோதும், திரும்பி வரும்போதும் தன்னோடு வந்த மூவரையும் மிக நீண்ட இடைவெளி விட்டே செவ்விழி கூட்டி வந்தார். முறியடிப்புப் பயிற்சி பெற்றவரல்லவா முன்னெச் சரிக்கையோடு செயற்பட்டார். திரும்பி வந்து சேர்ந்துவிட்டார்.

செவ்விழி வந்தவுடன் வினோதா புறப்பட வேண்டியிருந்தது. கண்ணிகளை விதைத்துவிட்டு நின்ற லெப்.கேணல் பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவுப் போராளிகள் நால்வரையும் பின்னரங்குக்குக் கூட்டிப் போய் விட வேண்டும். அந்த நால்வர், வினோதா, அணிமுதல்வி ஒருவர், போராளி ஒருவர் என ஏழு பேரும் செவ்விழி போய்வந்த பாதை வழியே புறப்பட்டனர்.

தலைக்கு மேலே சிங்களப் படையினர் ஏவிய எறிகணைகள் கூவியபடி கடந்தன. குறிப்பிட்டளவு இடைவெளி விட்டு நகர்ந்த அணியின் நான்காவதாக வினோதா, பின்னால் அணிமுதல்வி, பின்னால் ஏனையோர் போய்க்கொண்டிருக்க திடீரென ஏறத்தாழ ஐம்பது (50) மீற்றர்கள் முன்னால் ஒரு வெடிப்பொலி எழ, தொடர்ந்து புழுதி, கிளைகள், இலைகள் எல்லாம் சேர்ந்து எழுந்தன.

ஒரு எறிகணை விழுந்து வெடிப்பதாக உணர்ந்து கொண்ட வினோதா மரமொன்றோடு காப்பெடுத்தார். கண நேர இடைவெளியில் ஏறத்தாழ இருபத்தைந்து (25) மீற்றர்கள் முன்னால் மீண்டும் வெடிப்பொலி, புழுதி, கிளைகள், இலைகள் எழ, பரணி வித்துடலாக வீழ்வது தெரிந்தது. புழுதி சற்று அடங்கியபோது முன்னாலும் எவரையும் காணோம். பின்னாலும் காணோம். வினோதா தனித்து நின்றார். வெடிப்பொலி எழுந்த திசையில் ஆண்கள் சிலரின் நடமாட்டத்தைக் கண்டார். நம்மவர்கள் என்ற நினைவில் சில அடிகள் முன்னே வைக்கவும் இவரை நோக்கிப் பீ.கே.எல்.எம்.ஜி சுடுகலனால் அவர்கள் சுடத் தொடங்கினர்.வெடிப்பொலிகளுக்கான மூலம் அமுக்க வெடிகள் என்பதும், முன்னே நிற்பது யார் என்பதும் இப்போது வினோதாவுக்கு விளங்கியது. ஏனையவர் களுக்கு இவ்விடயம் நேர காலத்துக்கே விளங்கியதால், அவர்கள் பறந்துவிட்டனர் என்பதும் விளங்கியது.

நான்காம் இலக்கப் பாதணியை அணிகின்ற, நான்கரை அடிகள் உயரம் கொண்ட வினோதாவின் ஒல்லியான உருவைக் கண்ட சிங்களப் படையினர் அவரைக் கடுகென எண்ணி, வளைத்துப் பிடிக்க முயன்றனர். அவர்களுக்குத் தன் காரத்தைக் காட்டிய வினோதா, படையினரைச் சுட்டபடியே தான் நின்ற காப்பரணுக்கு வந்து சேர்ந்தார். வினோதாவின் வரவுக்காகக் காத்திருந்த சுடரிசை அமுக்கவெடித் தாக்குதல் நடந்த இடத்தைத் தேடுதல் செய்ய இவரோடு மருதஎழிலையும் ஒரு ஆண் போராளியையும் அனுப்பினார். தேடுதலின் போதான நேரடி மோதலில் மருதஎழில் விழுப்புண்ணேற்றார். அவரின் சுடுகலனை ஆண் போராளி எடுத்துக்கொள்ள, மருதஎழிலைக் காவும் பணி வினோதாவுக்கே. குருவி தலையில் பனங்காய்.உருவில் தன்னில் பெரியவரான மருதஎழிலைக் காவுவதும், சிங்களப் படையினரைச் சுடுவதும், காவுவதும் சுடுவதுமாக அவரைக் காப்பரணுக்குக் கொண்டு சேர்த்தார் வினோதா.

இப்போது மாலையாகிவிட்டது. நாடு இருளமுன்னரே இருண்டுவிடுகின்ற காட்டினுள்ளே தொடங்கியது வினோதாவின் அடுத்த பணி. உடனடியாகத் தயார்ப்படுத்தப்பட்ட காவுபடுக்கையில் மருதஎழிலை ஏற்றி மூன்று ஆண் போராளிகளும் ஒரு பெண் போராளியுமாகச் சுமந்து பின்னே வர, கப்டன் அறிவுமலர் வானொலிக் கருவியூடாக போய்ச் சேரவேண்டிய இடத்தில் உள்ளோருடனும் வழியனுப்பிய இடத்தில் உள்ளோருடனும் தொடர்பைப் பேணியபடி வர, ஒரு திசைகாட்டியின் உதவியுடன் அணியை வழி நடத்தியபடி முன்னே போய்க்கொண்டிருந்தார் வினோதா.

மாலை 5.30 மணியளவில் தொடங்கிய அவர்களின் நீண்ட பயணம், தொலைதூர இலக்கை அடைந்தபோது விடிகாலை 3.30 மணியாகிவிட்டிருந்தது. பெற்றோரைக் காணச் சென்ற இருவரும் தம் காப்பரணுக்குத் திரும்பியதும், செவ்விழியும் வினோதாவும் மீளவும் தமதணிக்குச் சென்றனர். அவர்களுக்காக அங்கே பல பணிகள் காத்திருக்கின்றன.

மலைமகள்

Dec 23, 2008

போர் முகம்


"இரவு 2.30 மணிக்கு தொடங்கின சண்டையில ஆமிக்காறங்கள் எங்களின்ர பொசிசனுகள் கொஞ்சத்தைப் பிடிச்சிட்டாங்கள். ஆமிக்காறங்களிட்ட பிடிபட்ட பொசிசனுகளையும் பண்டையும் பிடிக்கிறதுக்காக நாங்கள் சண்டைக்கு வந்திட்டம். விடிய 5.00 மணிக்கு தம்பியவ நீங்கள் உடனையும் இறங்குங்கோ' எண்டுற கட்டளை வந்திட்டுது. சண்டை துவங்கினதில இருந்து எப்பதான் எங்களுக்குச் சந்தர்ப்பம் வரப்போகுதோ தெரியேல்ல எண்டு ஏங்கிக்கொண்டிருந்த எங்களுக்கு இந்தக் கட்டளை வந்தது தான் உடனையுமே நாங்கள் எல்லோரும் குறிப்பிட்ட இடத்துக்குப் போய்ச் சேந்திட்டம்" என்ற முறியடிப்பு அணிப் போராளி கீரன் புன்சிரிப்புடன் சிங்களப் படைகளைக் கொன்று குவித்த தங்களது சண்டைப் பதிவுகளை வரிசைப்படுத்தினான்.

"நேரம் 5.10 மணிதான் இருக்கும். ஆமிக்காறங்களிட்ட விழுந்த எங்களின்ர பொசிசனுகளைப் பிடிக்கிறதுக்கு எங்களின்ர அணி போய்க்கொண்டிருந்தது. மூவிங் ரேஞ்சுக்குள்ளால் நாங்கள் நகர்ந்து ஆமிக்காறங்கள் நிக்கிற பொசிசனுக்குப் பக்கத்தில் போட்டம். போய் நிலமையளை வடிவாய் அவதானிச்சம். நாங்கள் நிக்கிற இடத்தில இருந்து இடது பக்கத்தில இருக்கிற ஆறு பொசிசனில ஆமிக்காறங்கள் ஏறீட்டாங்கள். இப்ப நாங்கள் அந்த ஆறு பொசிசனையும் ஆமிக்காறங்களிட்ட இருந்து அடிச்சுப் பிடிக்கவேணும். எல்லா றெடி. நாங்கள் தொடங்கிறதுதான் வேலை. ஆமிக்காறங்கள் நிக்கிற இடத்துக்குக் கிட்ட நெருங்கீட்டம் ஆர்.பீ.ஜி அடியோட சண்டையைத் தொடங்கிறதுதான் எங்களின்ர அணியின்ர திட்டம்" என்று கீரன் சொல்ல முறியடிப்பு அணிப் போராளிகள் எங்களைச் சூழ்ந்து விட்டார்கள். நாங்கள் அமைதியாக, அனைவரும் சிரிப்பும், கூத்துமாய் அன்றைய சண்டையின் வெற்றியை வெளிப்படுத்தினார்கள்.

போராளிகளின் கும்மாளங்களிற்குத் தாளம் போடுவதைப்போல தலையை அசைத்தபடியே முறியடிப்பு அணிப் போராளி கீரன் சிங்களப் படைகளைச் சுறுட்டிக்கட்டிய அந்தச் சமர்க்களத்தின் பதிவுகளை புரட்டிப்போட்டன். "எங்களின்ர அணியில ஆர்.பி.ஜி போய வந்த அறிவு எங்களின்ர முறியடிப்பு அணியளின்ர சார்பில் முதலாவதாய் மங்களத்தைத் தொடங்கினான். எங்களின்ர எதிர்ப்பை விடவும் ஆமிக்காறங்களுக்கும் எங்களுக்கும் இடையில பயங்கர சண்டை ஒண்டுமே தெரியல அந்தளவுக்கு புகையும் மருந்து மணமும்தான் இருந்தது. "என்றவன் அங்குமிங்கும் மூக்கை அசைத்தான் "நாங்கள் ஒருக்கால் ஆர்.பி.ஜி அடிக்க ஆமிக்காறங்கள் ஏழு எட்டுத் தரத்திற்குமேல ஆர்.பி.ஜியால போட்டு பொழிஞ்சுகொண்டிருந்தான்" என்று கீரன் சொல்ல ‘அப்ப அவன் அடிச்ச மற்றதுகளெல்லாம் என்ன மச்சான்" என்றான் ஆற்றலன். "டொங்கானுகள் பிகேயள் ஏகே எல்.எம்.ஜியள்" என்றவன் "இதுகளோட லோவுகளாலையும் குண்டுகளாலையும் போட்டு அந்தஇடத்தையே... பிறகென்ன எரிமலைதான்" என்றான் கீரன்.

முறியடிப்பு போராளிகளின் சண்டை அனுபவம் மிகவும் கடுமையானதாய் இருந்தது. இந்தளவுக்குள்ளையும் எப்படி தப்பிநின்றாங்களோ தெரியல்ல என்று மனசுக்குள் நினைத்து சற்று பயந்துகொண்டோம். எங்களது சிந்தனை தேவையற்றதுபோல "அண்ண ஆமிக்காறங்கள் எவ்வளவுதான் அடிச்சாலும் நாங்களும் விடேல்ல எங்களின்ர பொடியளும் எல்லாத்தையும் போட்டு முழுமையான எதிர்பையும் கொடுத்தம் ஆமிக்காறங்கள் அடிச்ச குண்டு ஒன்று எங்களுக்கு கிட்ட விழுந்திற்றுது.

அதில எங்களின்ர ஆர்.பி.ஜி அறிவு காயப்பட்டான். காயம் கொஞ்சம் பெரிதாகத்தான் இருந்தது. தசை பிஞ்சு தொங்கிக்கொண்டிருக்க, இரத்தம் பாயிறமாதிரி ஓடிச்சுது ஆனாலும் அறிவு ஓயமாட்டன் என்றிட்டான். ஆர்.பி.ஜி போட்ட செல்லை அடிச்சுப்போட்டு வாறன் என்ற நிற்கிறான். எங்களின்ர மெடிசின் காறன் விடேல்ல அறிவைப்பிடித்து மருந்தைக் கட்டிப்போட்டு பக்கத்தில இருந்த எங்களின்ர பொசிசனுக்குள்ள விட்டிட்டான்" என்ற கீரன் அருகிலிருந்து ஆற்றலனைப் பார்த்தான்.

அவ்வளவுதான் தனது பேச்சை நிறுத்திவிட்டான். "இப்பநிலமை மோசமாகிவிட்டது. ஆமிக்காறங்களின்ர கையோங்கிவிட்டது. ஆமிக்காறங்கள் நிக்கிற எங்களின்ர பொசிசனை அடிச்சுப்பிடிக்கிற திட்டத்தோட போனனாங்கள். கொஞ்சம் நெருக்கடியைச் சந்தித்தம். ஆமிக்காறங்களின்ர எதிர்ப்பும் கடுமையாய் இருந்தது. இந்த நிலைமையில் நாங்கள் கொஞ்சம் பின்னுக்கு வந்திட்டம்" என்றவனின் சிரித்த முகம் சடுதியாகவே இருண்டது. இப்ப எங்களின்ர அணியிலிருந்த வெண்மதியும் காயப்பட்டிற்றான்' என்ற கீரன் "அண்ண என்னதான் நடந்தாலும் எங்களின்ர நடவடிக்கையிலை கொஞ்சம்கூட தளம்ப மாட்டம். முடிஞ்சவரைக்கும் பாதுகாத்து குறிக்கப்பட்ட இலக்கை அழிப்பம். இல்லையென்றால் உயிரைக்கொடுத்து அந்தவெற்றியைச் சாதிப்பம்." என்றதுதான் எங்களின்ர அடிப்படையாய் இருந்தது.

"நாங்கள் கொஞ்சம் பின்னுக்கு வந்திட்டம். அடுத்த நிமிடம் எல்லாத்தையும் ஓழுங்குபடுத்திக்கொண்டு வெளிக்கிட்டிட்டம். இந்த ஒழுங்குபடுத்தலின்படி நான் ஆமிக்காறங்களின்ர பக்கத்தில் நல்லாய் நெருங்கிப்போய் குண்டை அடிக்க, ஆற்றலன் தன்ர பீ.கேயால ஆமிக்காறங்களிற்கு அடிக்க காவலன் தமிழ்க்குமரன், செந்திரையன், இசைமாறன், கார்நெஞ்சன் ஆக்கள் இவ்வளவுபேரும் தங்களின்ர எதிர்ப்புகளை சமநேரத்திலே கொடுக்கவேண்டும். இதுதான் திட்டம்" என்ற கீரன் பலமான சண்டைக் கட்டத்திற்குள் சென்றான்.

"நான் நிறையக்குண்டுகளோட மூவிரேஞ்சுக்குளால போய்க்கொண்டிருந்தன். இப்ப ஆமிக்காறங்களிட்ட இருந்து நாங்கள் அடிச்சுப்பிடிக்கவேண்டிய முதலாவது பொசிசனுக்கு கிட்டப்போட்டன் அந்த பொசிசனைச்சுற்றி எல்லாப் பக்கத்திலையும் ஆமிக்காறங்கள் நிக்கிறாங்கள். பண்டுக்குமேல எல்லாம் ஆமிக்காறங்கள் நிறையப்பேர் நிக்கிறாங்கள். ஆனால் குண்டுகளோட போய்க்கொண்டிருந்த என்னை ஆமிக்காறங்கள் காணவில்லை. இப்ப 15 மீற்றர் தூரத்தில ஆமிக்காறங்கள் இந்த முறை எப்படியென்றாலும் பொசிசனைப் பிடிச்சிடவேணும். இதைத்தான் என்ர மனசில இருக்கிற ஒரேயோரு நோக்கம். மூவிங்ரேஞ்சுக்குள்ள ஒரு இடத்தில நல்ல மறைப்பு. அதில குண்டுகளோட அப்படியே கவர் எடுத்திட்டன் அதில இருந்துகொண்டு நிலமையை அவதானித்தன். எல்லா இடங்களிலையும் ஆமிக்காறங்கள் மொச்சுப்போய் இருக்கிறாங்கள். இப்ப எந்தப் பக்கம் ஆருக்கு குண்டு அடிக்கிறது.? இதற்கான விடையைத் தேடிக்கொண்டிருந்தார்.

"கையில குண்டு கழற்றியபடியே இருந்தது என்ர கண்ணுக்கு ஆமிக்காறங்கள் எல்லாரும் தெரிந்தாங்கள் இப்ப குண்டு அடிக்கிறதுதான் என்ரநோக்கம் அடிக்கப்போகிற குண்டுக்குக் கிடைக்கிற பெறுமானம் பெரிதாய் இருக்கவேணும். அதுக்கான இரையைத் தேடிக்கொண்டிருந்தன் பொசிசனுக்குப் பக்கத்தில பண்டுக்குமேல ஆமிக்காறங்களின்ர பீ.கே.யும் ஆர்.பி.ஜியும் இருந்தது. இது என்ர கண்ணுக்கு பட்டதுதான் பிறகென்ன?" என்ற கீரன் சீரியசாய் கதைத்துக்கொண்டிருந்தான்.

"ஆர்.பி.ஜி காரனும் பிகே காரனும் ஒரே அடியாய் நிக்கிறாங்கள். அதுமட்டுமல்ல இன்னும் நாலைந்து ஆமிக்காறர்களும் ஒன்றாய் நிண்டாங்கள். அவங்கள் எங்களுக்கு அடிக்கிறதிற்கு தயாராய் நிக்கிறாங்கள். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தினால், நாங்கள் எங்களின்ர நோக்கத்தை வேகமாய் அடைந்திடலாம். ஓரே அடியாய் இரண்டு குண்டுகளை எடுத்து சடசடவென அடிச்சன். அந்தளவுந்தான் இரண்டு குண்டும் பெரிய சத்தத்தோட வெடிச்சுது.

"அந்தக்குண்டுகள் வெடிச்சதோட மகே அம்மே எண்டு ஆமிக்காறங்கள் கத்தினாங்கள். அடுத்தது என்ன.? என்றது ஒன்றுமே தெரியேல்ல. எங்களின்ர ஆற்றலன் பீகேயால போட்டு பொளிஞ்சான். அதோட எங்களின்ர மற்றப்பொடியளும் கொடுத்தாங்கள். ஆமிக்காறங்களின்ர பீகே வரவே இல்லை, டொங்கான் மற்றது குண்டுகள் எல்லாத்தாலையும் போட்டுப் பொழிஞ்சுகொண்டிருந்தாங்கள். நாங்களும் விடேல்ல, வாழ்வா சாவ என்கிற கட்டத்தில நாங்கள் அடிபட்டம். கொஞ்சநேரம் அந்த இடம் குலுங்கிக்கொண்டிருந்தது" என்ற கீரன் வெற்றியின் வாசலில் நிற்கிறோம் என்பதாய் முகபாவனையைக் காட்டினான்.

"ஒரு பத்துநிமிடம் இந்தச்சண்டை நடந்திருக்கும். எங்களின்ர பொடியங்களின்ர அடியால ஆமிக்காறங்களிட்ட பொசிசன்களில ஒண்டு எங்களிட்ட விழுந்திட்டுது. எங்களிட்ட விழுந்த பொசிசனில லீடர் வெண்ணிலவண்ண நிண்டுகொண்டு எல்லாத்தையும் ஒழுங்குபடுத்தினார். இப்ப நாங்கள் அடுத்த பொசிசனைப் பிடிப்பதற்கு போய்க்கொண்டிருந்தோம். ஆர்.பீ.ஜி அறிவு காயத்தோடையும் எங்களோட வந்துகொண்டிருந்தான். முதல் மாதிரியே நான் குண்டு அடிக்க அதற்குப் பின்னுக்கு எல்லா வெப்பனுகளும் நகர்ந்துகொண்டிருந்தது. அடுத்த பொசிசனையும் அடிச்சுப்பிடிச்சிட்டம். இதில எங்களுக்கு பெரிசாய் எதிர்ப்புக்கிடைக்கவில்லை.

இப்ப இதில இருந்து அடுத்த பொசிசனைப்பிடிக்க வேண்டும். நகர்ந்தம் முதல் எங்கையும் இல்லாதமாதிரி பயங்கர எதிர்புகளைச் சந்திக்கவேண்டியதாய் இருந்தது. என்ன எல்லாத்தையும் போட்டு அடிக்கமுடியுமே அத்தனையும் போட்டு எங்களிற்கு அடிக்கத்தொடங்கீற்றாங்கள் நாங்களும் விடாமல் சண்டைபிடிச்சம் இருந்தும் நிலமை எங்களுக்கு சாதகமாய் வரேல்ல" என்ற கீரன் பேச்சில் தளர்வு "ரவுண்ஸ் மாதிரி ஆர்.பிஜீசெல்லுகளை ஆமிக்காறங்கள் அடிச்சாங்கள் எப்படியும் இந்தப் பொசிசனைப் பிடிக்கிற என்கின்ற வேகத்தில நாங்கள் மூன்றுதரம் ரை பண்ணிப்பார்த்தம் எதுவும் சரிவரேல்ல. ஆனாலும் அந்தப் பொசிசனைப் பிடிப்பதற்காக சாதகமான நிலைமைகளைப் பிடிச்சிட்டம். இப்ப எங்களிட்ட இருந்த ரவுண்சுகளெல்லாம் முடிஞ்சுது அதுகள் நிரப்புவதற்காக வெண்ணிலவன் அண்ணேன்ர இடத்திற்கு வந்திட்டம், என்ற கீரனின் அடுத்தகட்ட சண்டையை மனதுக்குள் தாங்கி அவனது முகத்தையே பார்த்தபடி இருந்தோம்.

Dec 21, 2008

உள்ளிருந்து ஒரு குரல்


2008 யூலை மாதம், மன்னார்க் கட்டளைப் பணியகப் போராளிகளும், 2ஆம் லெப்.மாலதி படையணியினரும் தேத்தாவாடியில் உடனடியாக ஒரு முன்னணிக் கோட்டை ஏற்பாடு செய்து அதில் காப்பிலீடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்த உடனடி ஏற்பாடு போதிய காப்பானதாக இருக்கவில்லை. வெள்ளமெனத் திரண்டு வரும் கடலலைகளுக்கு முன்னால் சிறு சிறு கற்களைத் தூக்கிப் போட்டுத் தடுப்புச் செய்வதுபோல, மூர்க்கமும் போர்வெறியுங்கொண்டு முன்னேறும் சிங்களப் படைகளுக்கெதிராக மனத்திடத்தை மட்டும் காப்பாக முன்னிறுத்தியபடி புலிகள் சண்டை செய்து கொண்டிருந்தனர்.

தேத்தாவாடியில் அரண்களைப் போட்டு பாதுகாப்பு ஏற்பாட்டைச் செய்வதற்குச் சிறிய கால அளவேனும் தேவையாக இருந்தது. இந்தக் கால அவகாசத்தைப் பெறுவதற்காகவும் வேலைசெய்து கொண்டிருக்கும் போராளிகள் மீது தாக்குதல் நடத்த வரும் எதிரியின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவும் ஒரு அணி முன்னே ஊடுருவி தீக்கழிக்குச் சென்றது. மன்னார்க் கட்டளைப் பணியகத்தைச் சேர்ந்த போராளிகள் ஆறுபேரும் மாலதி படையணிப் போராளிகள் ஆறுபேரும் வேவு அணியில் நான்கு பேருமாகப் பதினாறு பேர் கொண்ட அந்த அணி மூன்று நாட்களுக்குத் தேவையான உலருணவுடனும் தாக்குதலுக்குத் தேவையான வெடி பொருட்களுடனும் நகர்ந்தது.

முன்னே மூன்று கிலோ மீற்றர்கள் நகர்வு. நகரும் இடமெங்கிருந்தும் அடி கிடைக்கும் என்ற காரணத்தால் விழிப்புடனேயே அனைவரும் சென்றனர். இவர்களுக்கான கட்டளையை வழங்குவதற்காக மன்னார்க் கட்டளைப் பணியகத்தைச் சேர்ந்த ஜானும் உடன் சென்றார். போகுமிடமெல்லாம் படையினர் அவ்விடங்களில் நடமாடியதற்கான அடையாளங்கள் இருந்தன. காலணித்தடம், நெகிழப்பைகள், குருதித் தடுப்புப் பஞ்சணைகள், தீப்பெட்டி போன்ற இன்னபிற அங்கே காணப்பட்டன. சென்ற இடத்தை அவதானித்து இரண்டு நிலைகளைப் போட்டுக் காப்பில் ஈடுபட்டவாறே அவ்விரவைக் கழித்தனர். அடர்காடு, மையிருட்டு அடுத்தவரைத் தொடுகையின் மூலமின்றி இனங்காண முடியாத இருள். அந்த இரவு ஒருவாறு விடிந்துவிட்டது.


அடுத்த நாட்காலை வேவுப் போராளிகளும், இவர்களுமாகச் சேர்ந்து தடயம் பார்த்துப் பொறி வெடிகளைப் புதைத்தனர். நிற்கும் இடத்துக்குச் சற்றுப் பின்னே புதிய முன்னணிக் கோட்டை அமைப்பதற்கான திட்டம் உருப்பெறுவதற்காக பின்னிருந்து ஊர்தியொன்று தருவிக்கப்பட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டது. ஊர்தியின் சத்தத்தை இனங்கண்ட படையினர் தமது தொலைத்தொடர்பு உரையாடல்களில் அவ்வூர்தியையும், போராளிகளையும் சுற்றிவளைத்துப் பிடிப்பதற்குத் திட்டமிட்டனர்.

இந்த உரையாடல் ஒற்றாடலின் மூலம் தெரியவந்ததால் ஊர்தி உடன் பின்னுக்கு அனுப்பப்பட்டது. அன்று மதியம் ஊர்தி நின்ற இடத்தைக் குறிவைத்து எறிகணைகள் மழைபோல வந்து பொழியத் தொடங்கின. இதனால் ஊடுருவிச் சென்று நிலைகொண்ட அனைவரும் தமது நடமாட்டத்தை நிறுத்திக் காப்பில் இருந்தனர். அன்றிரவு அவ்விடத்தை விட்டுப் பின்னகர்ந்து வேறிடத்தில் நிலை கொள்ளுமாறு அவர்களுக்குக் கட்டளை கிடைத்தது. எப்படியும் இவர்களை மோப்பம் பிடித்துப் படையினர் வந்து தாக்குவார்கள் என்பதை இவர்களும் அறிந்திருந்ததால் கட்டளைக்கேற்ப பக்கவாட்டாக இடம்மாறி அதற்குப் பின்னே நகர்ந்து வேறோரிடத்தில் அந்த அணி காவலில் நின்றது.

முக்கோணவடிவத்தில் ஒருபுறம் வேவு அணியும், இன்னொரு பக்கம் பெண்புலிகளும், மறுபுறம் மன்னார்க் கட்டளைப் பணியகத்தினருமாக நிலையைப் போட்டு விடிய விடிய மாறி மாறி விழித்திருந்தனர். ஒருபுறம் நிற்பவர்களுக்கும் மறுபுறத்தில் நிற்பவர்களுக்கும் நாற்பது மீற்றர்களே இடைவெளி. அதிகாலை நான்கு மணிக்குக் காடுமுறிக்கும் சத்தம் கேட்டது. பெண்புலிகளின் பக்கம் காவலில் நின்ற வசியரசி புதியவர் என்பதால் சான்மொழியைத் துணைக்கு எழுப்பினார். சத்தங்கேட்டு அனைவருமே விழிப்பு நிலைக்குச் சென்று தகுந்த காப்புக்களில் நின்றனர்.

படையினர் பன்னிரண்டு பேரளவில் நகர்ந்து வருகின்றனர் என்பது அவதானிக்கப்பட்டது. நகர்ந்து வருபவர்கள் இவர்கள் போட்ட முக்கோணக் காப்பை அவதானித்தால் அந்த முக்கோணத்தின் மூன்று புறமிருந்தும் புலிகள் தமது எதிர்ப்பைக் காட்டத் தயாராக நின்றனர். கண்டமேனிக்குப் பரவலாக நகர்ந்த சிங்களப்படைகள் இவர்களுக்கு கிட்டவாக நகர்ந்து இவர்களது முக்கோண நிலையின் உட்புறத்தே வந்துவிட்டனர். சான்மொழி எழுந்து காப்பில் நிற்க ஜான்மாதிரி ஒரு உடற்பருமனானவர் அவரது உடையமைப்புடனேயே அவர்களுக்கு அருகில் வருவது தெரிந்தது. வந்தவர் P.மு சுடுகருவி வைத்திருப்பதைப் பார்த்தவுடன் இவர் ஜானல்ல என்பதைச் சான்மொழி இனங்கண்டார்.

எனினும் உள்ளே வந்த படையினரை ஒரு பகுதியினரும் சுட முடியாது. சண்டை வெளிப்புறமாகவே நடைபெறலாமென எதிர்பார்க்கப்பட்டது. இப்போது முக்கோணத்தின் உள்ளே எதிரிகள் தாக்கினால் மறுபுறத்திலிருக்கும் எம்மவர்களே பலியாகக் கூடும். இதையுணர்ந்த போராளிகள் முக்கோணத்தை விட்டுப் படையினர் வெளியேறு மட்டும் மறைவாக இருந்தனர். உள்ளே வந்தவர் கொற்றவையின் தலையை எட்டிப்பிடிக்கும் தூரத்துக்கு வந்துவிட்டார். மூன்று மீற்றரில் இப்போது எதிரி. மன்னார்க் கட்டளைப் பணியகத்தைச் சேர்ந்த பாலு சடுதியாகச் செயற்பட்டு கொற்றவைக்கருகே வந்தவனை விழுத்திவிட்டார்.

விழுந்தவன் தனது துப்பாக்கியால் கொற்றவைக்குச் சுட அதைக்கண்ட பரணிதா விழுந்தவனுக்கு மறுபடியும் சுட்டு அவனைச் செயலிழக்கப் பண்ணினார். இப்போது அனைவரையும் அனைவரும் இனங்கண்டு விட்டனர். உள்ளே வந்தவர்களை ஒருவாறு முக்கோணத்தின் வெளியே தள்ளியாகிவிட்டது. வெளிப்புறமாக எல்லோரும் தாக்கத்தொடங்கினர். "மகே அம்மே" என்ற சத்தம் வெளிப்புறமிருந்து கேட்கத் தொடங்கியது. முக்கோணத்தில் நின்ற போராளியொருவருக்குப் பாதக்காலில் பெரிய காயம்.

கட்டளைப் பணியகத்துடனான தொடர்பு சீராக இருக்க, நின்ற இடத்திலிருந்து இவர்களைப் பின்வாங்கி வருமாறு கட்டளை கிடைத்தது. வந்தவர்கள் இவர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு "மகே அம்மே" சொல்லிக்கொண்டு பின்வாங்கி விட்டனர். எறிகணைகள் துரத்திவந்து விழுவதற்கிடையில் காயக்காரரை யும் தூக்கிக்கொண்டு அந்த ஊடுருவல் அணி பின்வாங்கியது. சற்றுப் பின்னே சென்று தடிவெட்டிக் காவு படுக்கை செய்து அவரைத் தூக்கலாமென்று சுற்றிலும் அவதானித்தால் விடத்தல் பற்றைகளே எங்கும் தென்பட்டன. வேறு வழியின்றி விடத்தல் தடிவெட்டி முள்ளைச் சிராய்த்து விட்டு காயக்காரரை காவு படுக்கையில் தூக்கிக்கொண்டு தேத்தாவாடிக்கு வந்து சேர்ந்தனர்.

அந்த இரண்டு நாட்களும் போதிய உணவும், நீரும், ஓய்வுமின்றி இருந்ததால் ஏற்கெனவே இரத்த அழுத்தம் இருந்த ஜானுக்குக் களைப்பாக இருந்தது. அவர் தனது நோயையும், இயலாமையையும் அதுவரை வெளிக்காட்டவில்லையெனினும் முன்னணிக்கோட்டுக்கு அண்மித்த வழியில் மயங்கிக் கீழே சரிந்தார். தனது தந்தையைப் போன்ற அகவையிலிருந்த அவரை சான் மொழியும் இன்னுமொருவருமாகத் தூக்கிச் சென்று அவருக்குரிய இடத்தில் விட்டனர். இவர்கள் ஊடுருவிச் சென்ற கால இடைவெளியைப் பயன்படுத்தி தேத்தாவாடி முன்னணிக்கோடு சண்டைக்குத் தயாரான முன்னேற்பாடுகளைச் செய்திருந்தது. அந்த ஏற்பாடுகள் நிறைவடையும் முன்னரே அந்த முன்னணிக் கோட்டின் ஒருபுறம் தனது அணியை காவலில் நிறுத்தியிருந்த அமர்வாணத்தின் பகுதியில் சண்டை தொடங்கி விட்டிருந்தது.

‘' '' '' '' '' '' '' '' '' ''

பாப்பா மோட்டையில் நின்ற 2ஆம் லெப்.மாலதி படையணியின் முறியடிப்பு அணியில் ஒருவராகத் துளசியும் நின்றார். அடிக்கடி படையினர் முன்னகர்வதால் அடிக்கடி முறியடிப்புச் சமர்களும் நடந்துகொண்டிருந்தன. காலை, நண்பகல், மாலை, இரவு என்று காலவேறு பாடுகளற்றுச் சண்டைகள் தொடர்ந்தன. முன்னணிக் கோட்டுக்கும், அதற்கான முதன்மைத் தளத்துக்கும் ஐம்பது மீற்றர் இடைவெளியே இருந்தது. ஒவ்வொரு நாளும் டாங்கிகளின் சூடுகள் இவர்களைத் தேடிவந்தன. முதன்மைத் தளத்துக்கருகே வீதி இருந்ததால் அவ்வீதி வழி டாங்கியுடன் படையினர் முன்னேற முற்பட்டனர்.

முதன்மைத் தளத்திலிருந்து எதிரிகளை இனங்கண்டதால் இவர்களும் பக்கவாட்டாகவே அடிக்கத் தொடங்கிவிட்டனர். டாங்கிச் சூடுகள் பற்றை பறகுகளையெல்லாம் கிளப்பியெறிந்ததால் எங்கோ நிம்மதியாகக் கூடுகட்டியிருந்த குளவிகள் தமது இருப்பிடத்தையிழந்து சினங்கொண்டு பறந்து படையெடுத்து வந்தன. ஈழமங்கை முதன்மைத் தளத்திலிருந்து முன்னணி நிலைகளுக்குக் கட்டளை வழங்கிக் கொண்டிருந்தார். அருகே நடைபெறும் சண்டையையும் வழிப்படுத்திக் கொண்டிருந்தார்.

குளவிகளின் கோபம் ஈழமங்கையை நோக்கித் திரும்பியது. கட்டளை வழங்க முடியாது குளவிகள் அவரைக் கொட்டித் தள்ளின. புவிநிலைகாண் தொகுதியுடன் நின்ற பிருதுவி ஈழமங்கை மயங்கிச் சரிய அவரது நடைபேசியை எடுத்துத் தானே கட்டளைகளை வழங்கிக் கொண்டிருந்தார். ஈழமங்கையைப் பின்னுக்கு அனுப்பிவிட்டு அவ்விடத்தைப் பொறுப்பெடுக்க அகமதி வந்தார். சிறிது நேரத்துக்குள் அவ்விடம் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது. முன்னே, பின்னே பக்கவாட்டாக என்று எங்கும் சிங்களப் படைகள்.

கப்டன் மல்லிகாவுடனான முறியடிப்பு அணிமட்டும் அவ்விடத்தில் நிற்க ஏனையோர் அனைவரும் பகுதிப் பொறுப்பாளர் சத்தியாவின் கட்டளைக்கமைவாகப் பின்வாங்கிச் சென்றனர். அன்றைய நாள் இவர்களுக்கு உணவு கொடுக்க வந்து படையினரிடம் மாட்டிக்கொண்ட உழுபொறியை மீட்கும் பணி இரவிரவாகத் தொடர்ந்தது. உழுபொறியின் ஓட்டுநருடன் தேவா தலைமையில் சென்ற முறியடிப்பு அணி உழுபொறியை மீட்பதற்கான சண்டையைச் செய்தது. P.K யும், 50 கலிபருமாக அடித்துக் கொடுக்க, ஆண், பெண் போராளிகளடங்கிய முறியடிப்பு அணி அன்றிரவே சண்டையிட்டு உழுபொறியை மீட்டு வந்தது.

ஓயாது சண்டை, ஓயாது வேலை, ஊனுறக்கமில்லை, ஒழுங்கான குளிப்பு, முழுக்கில்லை, சேற்று வாடை, ஈரஆடை, குளவிகளும், நுளம்புகளும், பாம்புகளும் உறையுமிடத்தில் வாழ்க்கை என்றிருந்தாலும் போராட மறுப்பதில்லை புலிகள். சிங்களப் படைகளுக்கு இது அந்நியமண் புலிகளுக்கோ இது உரிமை மண். வாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் இதுதான் நமது நிலம். இந்த நிலத்தில் நெருப்பெரித்து மக்களைக் கலைத்து அந்த நெருப்பிலே குளிர்காய வருகின்றான் எதிரி. அவன் மூட்டிய நெருப்புக்குள்ளேயே அவனைத் தள்ளி விழுத்திவிடக் கானகமெங்கும் காத்திருக்கின்றனர் புலிகள். நெருப்பு கொழுந்துவிட்டு எரிகின்றது. அதன் பசியின்னும் அடங்கவில்லை. புலிகளின் பணியும் இன்னும் முடியவில்லை.

எழுதியவர் - அம்புலி

Dec 20, 2008

கரும்புலிகளின் வரலாறு



ஒப்பிரேசன் லிபரேசன்" எனப்பெயரிட்டு வடமராட்சியில் இராணுவ நடவடிக்கை தொடங்கிய அன்று ஜே.ஆர் கொழும்பில் இலங்கை வங்கியில் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது விடுதலைப் புலிகளை அழிக்கும் வரை இந்தப்போர் ஓயாது என்றார். அக்காலத்தில் லலித் அத்துலத் முதலி பேட்டி ஒன்றில் தீவிரவாதிகளைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்த காலம் போய்விட்டது.

இன்று போருக்கு அழைக்கும் காலம் நெருங்கிவிட்டது என்றார். இவ்விரு தலைவர்களின் செருக்கு நிறைந்த கூற்றை கப்டன் மில்லர் தன்னை ஒரு உயிராயுதமாக்கி முறியடித்தான். இதுவே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்து விட்டது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் ஆக்கிரமிப்பு இராணுவமாக நிலை கொண்டிருந்தபோது அவ்வாறு இருக்க முடியாது என்ற செய்தியை மில்லரின் தாக்குதல் உணர்த்தி நின்றது.

வடமராட்சி நெல்லியடி மகாவித்தியாலத்தில் சிங்களப்படை குவிக்கப்பட்டிருந்தது. வடமராட்சியில் 'லிபரேசன் ஒப்பிரேசன்" இராணுவ நடவடிக்கையால் எழுந்த வெற்றியை சிங்கள இராணுவம் உருசி பார்த்துக் கொண்டிருந்தது. வடமராட்சி மக்கள் அகதிகளாக வெளியேறியிருந்தனர். சிங்களத்தலைவர்கள் இன்றுபோல் அன்றும் கொழும்பில் வெற்றி முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். நெல்லியடிப் படைத்தளத்தை அழித்து இந்த வீணர்களின் இறுமாப்பை அடக்க வேண்டுமென தேசியத்தலைவர் வே.பிரபாகரன் விரும்பினார். அது வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.


நெல்லியடிப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அனைத்தும் தயார்படுத்தப்பட்டன. அத்தாக்குதல் வீரனாக கப்டன் மில்லர் தேர்வு செய்யப்பட்டிருந்தான். சரியாக யூலை 5ஆம் நாள் இரவு 7.00மணி 3 நிமிடத்திற்கு கப்டன் மில்லருடைய வாகனம் முகாமிற்குள் மோதி வெடித்தது. நூற்றுக்கணக்கான இராணுவம் கொல்லப்பட்டும் பலநூறு படையினர் காயமடைந்தும் இருந்த அந்த வரலாறு எழுதப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றில் இவ்வாறான தாக்குதல் ஒன்று முதன் முதலாக நிகழ்த்தப்பட்டது.

கப்டன் மில்லரின் அந்த உன்னதமான தியாகத்திற்கு இலங்கை அடிபணிய நேரிட்டது. இத்தாக்குதலின் பின் ஜே.ஆர் சண்டே ரைம்ஸ்க்கு பேட்டி அளிக்கையில் நெல்லியடியில் புலிகளின் கரும்புலித் தாக்குதலுக்குப் பின் இனப்பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு சரிப்பட்டு வராது அரசியல்த் தீர்வு ஒன்று தான் ஒரேவழி என்ற முடிவை நான் எடுத்தேன். அதன் பின்னரே இந்தியாவுடன் பேச்சு நடாத்தி ராஐீவ் காந்தியுடன் ஒப்பந்தம் செய்தேன் என்றார். அப்போது சனாதிபதியாக இருந்த ஜே.ஆர் ஜெயவர்த்தனா உண்மையிலேயே பயந்து போனார். இதுபோன்ற தாக்குதல்கள் மேலும் நடந்தால் பேரழிவை இராணுவம் சந்திக்கும் என எண்ணினார்.

இந்தியாவிற்கு ஓடிப் போனார். புலிகளால் இருக்க முடியவில்லை. வாருங்கள் வந்து பிரச்சனையைத் தீருங்கள். என அப்போதைய பிரதமர் ராஐீவ் காந்தியின் காலில் வீழ்ந்தார். அதற்கு முன்னர் திம்பு பேச்சுவார்த்தையாகட்டும் அல்லது இந்தியா சிறப்புத் தூதுவர்களுடன் இலங்கை அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளாகட்டும் தமிழர்களிற்கு எந்த உரிமைகளையும் வழங்கத் தயாராக இல்லாமல் இருந்த ஜே.ஆர் இப்போது மட்டும் ஏதாவது கொடுக்கத் தயாராக இருந்தார். ஜே.ஆரை வழிக்கு கொண்டு வருவதில் கரும்புலி கப்டன் மில்லர் வெற்றி கண்டான்.

இந்த மாவீரர்களை எவ்வாறு நெஞ்சம் மறக்கும். இதுவரை 379கரும்புலிகள் வீரகாவியமாகியுள்ளனர். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் புதிய திருப்பு முனையாக அமைந்தது கடற்புலிகளின் பிரவேசமாகும். அதிலும் கடற்கரும்புலிகளின் வரவு மேலும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தி நிற்கிறது. 1990ஆண்டு யூலை 10ஆம் திகதி தமிழீழக் கடற்பரப்பில் நன்கூரம் இட்டு நின்ற 'எடித்தரர்" என்ற ஆயுதக் கப்பல் கடற்கரும்புலிகளான காந்தரூபன், வினோத், கொலின்ஸ் ஆகிய வீரர்களால் தகர்க்கப்பட்டது. இதில் எதிரிகளுக்கு பெரும் உயிரிழப்பும், ஆயுத தளபாட இழப்பும் ஏற்பட்டது.

இதுபோன்று 1991வைகாசி 4ஆம் நாள் எஸ்.ஐ.என்.எஸ் அபிதா என்ற கப்பல் கடற்கரும்புலிகளான சிதம்பரம், ஜெயந்தன், ஆகிய வீரர்களால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இது சிறிலங்காக் கடற்படைக்கு மட்டுமல்லாது அரசிற்கும் ஒருபெரும் நெருக்கடியைக் கொடுத்தது. இது அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஐயரத்தினவிற்கு விழுந்த அடியாகக் கொள்ளலாம் 1988, 1989ஆண்டுகளில் ரோஹணவிஐய வீர , உபதிஸ்ஸ திஸாநாயக்கா போன்ற ஜே.வி.பி தலைவர்களை அழித்தது போல விடுதலைப் புலிகளின் தலைவர்களையும் கைது செய்து அழித்திடுவேன் என ரஞ்சன்விஐயரத்தினா கூறியிருந்தார்.

இந்தக் கடற்புலிகளின் தாக்குதலுக்குப்பின் ரஞ்சன்விஐயரத்தினா பத்திரிக்கையாளர்களிடம் சாவுக்கஞ்சாத விடுதலைப்புலிகளின் தொடர்தாக்குதல்களால் சிறிலங்காப் படைகளுக்கு பெரும் தாக்குதலை ஏற்படுத்துகிறது என்றார். தேசிய விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு இன்று முக்கியத்துவம் பெறுகிறது. 1984ஆம் ஆண்டு தொட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண் போராளிகளை பின் களப்பணிக்கு உள்வாங்கிக் கொள்ளப்பட்டது அதற்கான கட்டமைப்பு இருந்தது. முதல் பொறுப்பாளராக மேஐர் சோதியா விளங்கினார். 1987அக் 10 அன்று இந்திய இராணுவத்துடனான தற்காப்புச் சமரில் 2ஆம் லெப் மாலதி வீரச்சாவடைந்தார்.

இவர் மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் இவரது நினைவு நாளையே பெண்கள் எழுச்சி நாளாக தமிழீழத் தேசியத் தலைவரால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கப்டன் அங்கயற்கண்ணி கடலில் எதிரிகளை அழித்து காவியமானவர் இவரே முதற்பெண் கடற்புலியுமாவார். இவர்களை தமிழினம் மறக்குமா? இதுவரை 4894 மகளிர் மாவீரர்களையும் நெஞ்சங்களில் நிறைந்துள்ளனர். 3ஆம் கட்ட ஈழப்போர் 19ஏப்பிரல் 1995 அன்னை பூபதி நினைவு நாளன்று தொடங்கியது. சமாதானத்தை கூறி ஆட்சியைப் பிடித்தவர் ஆனால் பதவிக்கு வந்தவுடன் இராணுவத் தீர்வே ஒரே வழிஎன போர் தெடுத்தவர்கள் இவர்களின் காலத்தில் புலிகள் மிகப் பெரும் வளர்ச்சியைப் பெற்றார்கள்.

18.07.1996 அன்று ஓயாத அலைகள் 1 எனப்பெயரிட்டு முல்லைத்தீவு கூட்டுப் படைத்தளம் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு முற்றாக அழிக்கப்பட்டது. 1100 படையினர் கொல்லப்பட்டதாக வெளிவுவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார். இத்தொகையை விட இன்னும் கூடுதலான படையினர் கொல்லப்பட்டனர் என்ற கருத்தும் உள்ளது. இத்தாக்குதலை முறியடிக்க அளம்பிலில் சிங்களப் படை இறக்கப்பட்ட போதும் அது அழிவையே சந்தித்தது. விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச அரங்கில் பெரும் மதிப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஓயாத அலைகள் 1 இல் 315வேங்கைகள் வீரச்சாவை எய்தினர். இந்த வீரர்களை எப்படி மறப்போம். எதிரியின் போர் வெறி அடங்காத நிலையில் ஜெயசிக்குறு தொடங்கியது. 1997.05.13 அன்று தொடங்கி 18மாதங்கள் நடந்தன. ஏ 9 வழியில் வேலி அமைப்பதே இராணுவத் திட்டம் இத்திட்டத்தை விடுதலைப் புலிகள் 6 நாட்களில் முறியடித்தனர். இராணுவத்திற்கு பேரிழப்பு ஏற்பட்டிருந்தது. இந்த முறியடிப்புத் தாக்குதலில் 2146 விடுதலைப் புலிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்திருக்கிறார்கள்.

இம் மாவீரர்களின் அற்பணிப்பு காலத்தால் அழிக்க முடியாதவை. சத்ஜெய 1, 2 இராணுவ நடவடிக்கை மூலம் பரந்தன் -கிளிநொச்சியை வன்பறிப்புச் செய்த இராணுவத்தை ஓயாத அலைகள் இரண்டின் மூலம் விடுதலைப் புலிகள் முறியடித்தனர். 403 போராளிகள் உயிரை ஈகம் செய்துள்ளனர். மாங்குளத்தைக் கைப்பற்றி கிளிநொச்சியை வந்தடைய முற்பட்ட வேளை ஓயாத அலைகள் 2நடந்து முடிந்தது. இராணுவத்திற்கு உளரீதியான பின்னடைவை ஏற்படுத்தின. இதன் காரணமானவர்கள் இந்த மாவீரர்களே.

ஓயாத அலைகள் 3 ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையால் 30,000 இராணுவம் ஈடுபட்டிருந்தது. அது 18 மாதங்கள் விழுங்கியிருந்தது. ஆனால் ஓயாத அலைகள் 3 இல் விடுதலைப் புலிகள் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு 6 நாளில் முடிவுக்குக் கொண்டு வந்தார். 1999 நவம்பர் 1 தொடங்கியது. 1336வேங்கைகள் வீரச்சாவடைந்தனர். விடுதலைப் போராட்ட களநிலைகளில் ஓயாத அலைகள் 3 இன் வெற்றி என்பது தமிழ் மக்களிற்கு மிகுந்த உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி நின்றது. இம்மாவீரர்கள் என்றும் நினைவில் கொள்ளத் தக்கவர்கள். இலங்கைத் தீவில் இரு இராணுவக் கட்டமைப்பின் இராணுவ சமநிலையிலும் இது மாற்றத்தை உண்டாக்கியது.


விடுதலைப் புலிகள் சார்பான இராணுவ வலு அவர்களுக்கு சாதகமானதாகவே எழுந்து நிற்பதாகவே உலகம் கருதியது. இராணுவ ஆய்வாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்திய மற்றுமொரு தாக்குதல் தரையிறக்கத் தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் 3 இன் தொடர்ச்சியாக டிசம்பர் 12 வெற்றிலைக்கேணி, புல்வெளி போன்ற பகுதிகளில் இராணுவ முகாம்கள் புலிகளிடம் வீழ்ந்தன. 1999 டிசம்பர் 17அன்று பரந்தனும், தெற்கு ஆனையிறவும் வீழ்ந்தன. இதனைத் தொடர்ந்து சில இராணுவத் தந்திரோபாயங்களைக் கையாண்டு ஆனையிறவு வடக்கே இயக்கச்சியை 2000 ஆம் ஆண்டு ஏப்பிரல் 22அன்று கைப்பற்றினர் 2000.04.23 அன்று ஆனையிறவு புலிகளிடம் வீழ்ச்சியடைந்தது.

இந்த ஆனையிறவைக் கைப்பற்ற புலிகள் அதிக விலை கொடுத்துள்ளனர். இதற்கு அரிய தியாகம் செய்த மாவீரர்களை மறப்போமா? 25.04.2001இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தீச்சுவாலை இராணுவ நடவடிக்கை முறியடிப்புச் சமரில் புலிகள் வெற்றிவாகை சூடினர். அப்போது இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்பே அவர்களை அமைதிவழிக்கு திரும்ப வேண்டி ஏற்பட்டது. அதற்குக் காரணமாக 141 வேங்கைகள் தங்களை ஈகம் செய்திருக்கிறார்கள். இதற்குப் பின் சந்திரிக்கா அரசின் இராணுவத் தோல்விகளால் தென்னிலங்கையில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. அந்த அரசியல் மாற்றங்கள் கூட தமிழர்களிற்கு எதுவும் தந்துவிடவில்லை. சர்வதேச அனுசரணையோடு நோர்வேயின் சமரசத்துடன் அரசு- புலிகளிடையே போர்நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது.

அதனைக்கூட நிராகரித்துவிட்டு மஹிந்தராஐபக்ச போர் புரிகிறார். இதன்நடுவே இந்தப் போரை தமிழ் மக்கள் எதிர் கொண்டுள்ளனர். விடுதலைப் புலிகள் இராணுவத்தின் முன்னேற்ற முயற்ச்சியை முறியடிக்க தற்காப்புச் சமரில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் மக்களின் விடுதலைக்காக தனது இன்னுயிரை போராளிகள் வழங்கி வருகின்றனர். இந்த வீரர்களின் இலட்சியக்கனவு ஒருநாள் நிறைவேறும்.

இந்நேரத்தில் கடந்த ஆண்டில் அனுராதபுர கூட்டுப்படைத்தள தாக்குதலில் 23கரும்புலிகள் செப்டெம்பரில் வவுனியா படைமுகாம் தாக்குதலின் 10கரும்புலிகளும் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்திருக்கிறார்கள். இவர்கள் இப்போதும் எம்மனதில் நிற்கிறார்கள். இந்த வேளையில் போரின் அனைத்து வழிகளிலும் நம்முடன் நின்ற பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வனும், பிரிகேடியர் பால்ராஐ்சுக்கும் இந்தப் போரில் வீரகாவியமான அனைத்துப் போராளிகளுக்கும் இந்த மாவீரர்கள் நாளில் எங்கள் வீரவணக்கத்தை வழங்கி நிற்போம். இந்தத் தேசம் விடியும் என்ற கனவுடன் சென்ற அந்த மாவீரர்களின் இலட்சியத்தைப் பின்தொடர்வோம்.

- கலியுகன்-

Dec 12, 2008

போர்முகம்

"விக்கீஸ்..." சில நிமிடங்கள் மௌனமாகிய தீபன் அண்ணையின் வார்த்தைகள் மீண்டும் வேகமாய் ஒலித்தன. "அவரொரு சிறந்த போர்வீரன். துணிச்சல் மிக்க போர்வீரன். சிறந்த நிர்வாகி. இவற்றையும் கடந்து அற்புதமான தளபதி. இவர் தான் இன்று உங்கள் அனைவரினும் முன்னும் அமைதியாய் உறங்கிக்கொண்டிருக்கிறார்" என்ற தளபதி தீபன் அண்ணையின் அஞ்சலி உரையைக் கேட்டதும் வந்திருந்த அனைவரும் மெய்சிலிர்த்து நின்றார்கள்.

அனைவரின் கண்களிலும் கண்ணீர் மௌனமாய் கசிவதும் மறைவதுமாய் இருந்தது. சிலர் வாய்விட்டு அழுதார்கள். பலர் தங்களிற்குள்ளே இரகசியமாய்க் கசிந்தனர். அமைதியின் உறைவிடமாக உருப்பெற்றிருந்தது மண்டபம். இவற்றுக்கு மத்தியில் தளபதி தீபன் அண்ணையின் குரல் மட்டும் அனைவரது காதுகளிலும் நிறைந்தபடி இருந்தது.


விடுதலைப் பாதையில் அல்லும் பகலும் உறக்கமற்று உழைத்த உயர்ந்த தளபதி விக்கீஸ் அண்ணையின் ஆரம்பகால வரலாறுகளை நினைவுபடுத்தினார். "1991ம் ஆண்டு பிற்காலத்தில் சந்திரன் -1 பயிற்சிப்பாசறையில் அவரிடம் இருந்த வேகம், ஒழுக்கம், கொடுக்கப்பட்ட பணியை சிறப்புடன் செய்துமுடிக்கும் பக்குவத் தன்மை இத்தனையும் விடுதலைக்கு விதையாகின்ற இறுதிக்கணம் வரை அவரிடம் அப்படியே இருந்தது." என்று தளபதி தீபன் அண்ணை சொல்லி முடிக்க நாகர்கோவில் களத்தில் போராளிகளை இரையாக்கும் துடிப்பில் அலையும் சிங்களப் படைகளுக்கு போக்குக்காட்டிச் செயற்படும் அவரின் வேகமும், துணிவும் எங்களை நிறைத்தன.

"பயிற்சியை நிறைவு செய்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்த இவர் 1996ஆம் ஆண்டு சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியில் தன்னை இணைத்து சிங்களப் படைகளின் பாதங்கள் பதிகின்ற இடங்களை அவர்களுக்கு புதைகுழிகளாக மாற்றும் பணியில் சிறப்புடன் செயற்பட்டிருந்தார். 1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிங்களப் படைகளால் மேற்கொள்ளப்பட்டிருந்த ‘ஜெயசிக்குறு' படைநடவடிக்கையில் தளபதி விக்கீஸின் பங்கு முக்கியமானது. எங்களது அனைத்துப் படையணிகளும் சிங்களப் படைகளுக்கு எதிராகப் போரிட்டு களத்தில் சிங்களப் படைகளை சரித்துக் கொண்டிருந்த காலம் அது. ஒவ்வொரு காட்டு மரங்களுடனும் போராளிகள் வாழ்ந்துகொண்டிருந்தனர். அப்போது சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்பு தளபதியாக இருந்து ஓயாதஅலைகள்-03 நடவடிக்கையில் வீரச்சாவடைந்த லெப் கேணல் ராகவன் அவர்களின் கீழ் தளபதி விக்கீஸ் செயலாற்றினார்


"மிகவும் நெருக்கடியான அந்தக் காலத்தில் களத்தின் முன்னிலையில் தீரமாகச் செயற்பட்டுக்கொண்டிருந்த தளபதி விக்கீஸ் அவர்களை சிறப்புத் தளபதி லெப் கேணல் ராகவன் இனங்கண்டு என்னிடம் அனுப்பினார். தளபதி ராகவன் அவர்களால் என்னிடம் அனுப்பப்பட்டிருந்த தளபதி விக்கீஸ் புரட்சிக்குளமான இருந்த புளியங்குளத்தில் இரண்டு பணிகளைச் சிறப்பாக ஆற்றியிருந்தார். சிஙிகளப் படைகளுடன் சண்டையிடுவது முதல் போராளிகளின் செயற்பாடுகளுக்கான நிர்வாகச் செயற்பாடுகளையும் பொறுப்பேற்று சிறப்புடன் செய்து முடித்திருந்தார்" என்றவர் "சண்டை நடக்கின்ற களமுனைப் பகுதிகளில் பின்தள நிர்வாகச் செயற்பாடுகளை நிர்வகித்துக் காட்டுவதில் வழிமூடி உறங்கிக்கொண்டிருக்கும் விக்கீஸ் தனித்திறமையுடையவர்"

"ஜெயசிக்குறு நடவடிக்கை காலத்தில் சிங்களப் படைகளின் கனவுகளைத் தகர்க்கும் உக்கிரமான போர் நிகழ்ந்தது. அதற்காக போராளிகளை ஓய்வற்று உறக்கமற்று உணவற்றுக் கூடப் போராடினார்கள். ஒவ்வொரு போராளிகளின் ஈகங்களாலும் களத்தில் சிங்களப் படைகள் சரிந்தார்கள். இது தமிழர் வரலாற்றுச் சரித்திரம். புரட்சிக்குளமாக மாறியிருந்த புளியங்குள மண்ணில் எழுந்த ஆயிரக்கணக்கான சவால்களை எதிர்கொண்டு முன்னணியில் நின்று போராடும் ஒவ்வொரு போராளிக்கும் கடைக்கவேண்டிய அனைத்தையும் உரிய நேரத்தில் சேர்ப்பிக்கும் உன்னதத்தை இந்த தளபதி செயற்படுத்திக் காட்டியிருந்தான்" என்று தீபன் அண்ணை சொல்லிக்ககொள்ள வடகளத்தின் ‘போர்முகப் பயணத்தில்' சந்தித்திருந்த தளபதி விக்கீஸ் அண்ணையின் செயற்பாடுகள் நினைவில் முட்டிமோதின.


ஒருமுறை நாகர்கோவில் களத்தில் தளபதி விக்கீஸ் அண்ணையுடனான பயணம். இடிந்த நகர்வகழிகள். எனினும் சீராக அமைக்கப்பட்ட மறைப்பு வேலிகள். காப்பரண்களில் நிற்கும் போராளிகளின் உணர்வுகளுடன் உறவாடுவதற்காக நாங்களும், முன்னணி நிலைகளைப் பார்வையிட்டுக் களமுனை நிலைப்பாடுகளை பார்வையிட்டு களமுனை நிலைப்பாடுகளை சீர்செய்வதற்காக தளபதி விக்கீஸ் அண்ணையுடன் சென்றுகொண்டிருந்தோம்.

இருவரும் இணைந்துவிட பயணம் சுவாரசியமானது. விக்கீஸ் அண்ணையின் வயிறு குலுங்கும் பம்பல்கள். ஓரிடத்தில் தகரத்தால் அமைக்கப்பட்டிருந்த மறைப்புவேலி தும்புதும்பாகச் சுருண்டு போயிருந்தது. அந்தப் பகுதியில் இருந்த மணல் பொரிந்துபோய் கறுப்பாயும், வெள்ளையாயும் இருந்தது. சீரான பாதைகளால் நகர்ந்துவந்த எங்களிற்கு கிழிந்துபோயிருக்கும் மறைப்புவேலி களத்தில் அசம்பாவிதங்கள் ஏதோ நிகழ்ந்திருக்கின்றன என்பதை உறுதிசெய்தன.

எங்களின் முன்னால் நகர்ந்துசென்ற தளபதி விக்கீஸ் அண்ணை எங்களைத் திரும்பிப் பார்த்தார். பார்வையில் ஆவேசம் தெரிந்தது. அவரை அறிந்தவர்கள் நினைக்கலாம் அது அவரது இயல்பான தோற்றம் என்று. ஆனால் நான் சொல்லும் ஆவேசம் அந்தச் சம்பவத்துடன் தொடர்பு பட்ட பிறிதான மாற்றம். "எங்களின்ர பெடியளுக்கு குடுக்கிறதுக்கு வந்த ஆமிக்காரங்கள் நல்லாய் வேண்டிக்கட்டிக்கொண்டு போட்டினம்.

எங்களின்ர இந்த வேலிக்குள்ள வந்தவுடனையும் தான் சண்டை தொடங்கினது. பெடியள் நல்ல குடுவை குடுத்து ஆமிக்காரங்களின்ர பொடி ஒண்டையும் எடுத்துவிட்டாங்கள். பரவாயில்ல ஆயுதங்களும் எடுத்திருக்கிறாங்கள். அது பெரிய சண்டையில்ல ஆனால் எங்களின்ர பெடியள் தெளிவாய் செயற்பட்டாங்கள்" என்றவர், சிங்களப் படைகளைக் கொல்லும் ஆர்வம் போராளிகளிடம் வேரூன்றி விருட்சமாய் வருவதாய்ச் சொன்னார்.

இத்தனையும் சொல்லி முடித்துவிட்டு "ஒவ்வொரு பத்தைக்குள்ளையும் சிங்களவனுக்குப் புதைகுழி கிண்டவேணும். கட்டாயம் கிண்டுவம். எங்களின்ர பெடியள் செய்துகாட்டுவாங்கள். அண்டைக்கு ஆமிக்காரங்களின்ர ஆர்.பி.ஜியள் பி.கேயள் எல்லாம் எடுத்திருக்கிறாங்கள்" என்று சண்டை நடந்த முன்னரணில் நின்று எங்களிடம் தெளிவுபடுத்தியது நினைவில் நின்றது.


அந்தச் சண்டை நடந்து முடிந்து ஓரிரு நாட்கள்தான் கடந்திருக்க வேண்டும். முன்னர் அடைக்கப்பட்டிருப்பதைப் போல அதே தகரங்கள். கம்பிக்கட்டைகளாக மரங்கள் என்று எல்லாமே புதிதாக வந்திருந்தன. அவற்றுக்கு அருகில் போய் நின்றபடியே "தம்பியாக்கள் வேலி அடைக்கேக்குள்ள கவனமாய் அடைக்கவேணும். மற்றது தகரத்துக்கு இந்த ஆணியளை அடிக்காதையுங்கோ. குடைஆணி எடுப்பிச்சுத் தாறன். இந்த ஆணி அடிச்சால் காத்துக்கு எல்லாத்தையும் பிச்சுக்கொண்டுபோகும். பிறகு இன்னும் ஒருக்கால் அதுக்குள்ள நிண்டு அடைக்க வேண்டிவரும்" என்று போராளிகளுடன் பக்குவமாய்க் கதைத்துக்கொண்டிருந்தது என்று அனைத்தும் நினைவில் வந்தன. இனி அந்த நாட்கள் மீண்டும் மலருமா...? இல்லை மலர்ந்து விடவேண்டும் என்று எண்ணிய மனசு துயரத்தில் துடித்தது.

களமுனை நினைவுகள் நெஞ்சை நிறைக்க தீபன் அண்ணையின் உரையை இடையில் தவறவிட்டு விட்டோம். மிகுதியை மனதில் பதியவைத்தோம். "எந்தக் களமுனையாக இருந்தாலும் சரி. அங்கு போரிடும் வீரருக்குப் பின்னால் பின்தள நிர்வாகச் செயற்பாடுகளை தளபதி விக்கீஸ் பொறுப்பேற்றுச் செய்கிறார் என்றால் களத்தில் நிற்கும் போராளிகள் இன்னும்; ஒருபடி மேலதிகமாய் செயற்படுவார்கள். ஏனென்றால் எந்தச் சவாலையும் இலகுவில் எதிர்கொண்டு தனக்குத் தரப்பட்ட பணியை ஒருபடி மேலாய் செய்துமுடிக்கும் திறமை அவரிடம் இயல்பாகவே நிலைபெற்றிருக்கிறது" என்ற தளபதி தீபன் அண்ணை "இத்தனை திறமைகள் விக்கீஸிடம் இருந்ததால் அவரை பின்தள நிர்வாகச் செயற்பாடுகளை சீர்செய்வதில் நான் ஈடுபடுத்திவந்தேன். குறிப்பாக ஜெயசிக்குறு அதனுடன் சமநேரத்தில் நடத்தப்பட்ட சிறாட்டிக்குளம், மன்னார், கிளிநொச்சி, ஒட்டுசுட்டான், மணலாறு களங்களில் நெருக்கடிகளின் மத்தியில் சிறப்பாகச் செய்து முடித்திருந்தார்" என்றார்.

"இந்தக் கட்டத்தில ‘அண்ண நான் முன்னுக்கு நிண்டு ஆமிக்காரங்களைக் கொல்ல வேணும். எனக்கு அந்தச் சந்தர்ப்பத்தை நீங்கள் தரவேணும். எனக்கு அடிபடுடதுக்கு சந்தர்ப்பத்தை நீங்கள் தரவேணும். நான் முன்னுக்கு நிக்கப்போறன்' என்று என்னிடம் பல தடவைகள் கேட்டிருந்தார். அந்த நேரத்தில எல்லாம் நான் ‘விக்கீஸ் நீங்கள் பின்தளத்தில் நிண்டு செயற்படுறது போராளிகளுக்கு நல்ல உற்சாகத்தைக் கொடுக்கும். நீங்கள் உங்களின்ர பணியை நல்ல சிறப்பாய் செய்யிறியள்.

தொடர்ந்து இந்தப் பணியை நீங்கள் செய்யுங்கோ" என்று சொல்லியிருந்தேன். இறுதியாக அவரின் விடாப்பிடியான வேண்டுதலால் அவருக்கு முன்தளத்தில நிண்டு சண்டை பிடிக்கும் சந்தர்ப்பத்தைக் கொடுத்திருந்தன்" என்ற தீபன் அண்ணை விக்கீஸ் அண்ணையின் குணவியல்புகள் பற்றியும் அவரது களமுனைச் செயற்பாடுகள் பற்றியும் விரிவாகச் சொல்லிக்கொண்டிருந்தார். இறுதி அஞ்சலிக்காக திரண்டிருந்த மக்கள் கூட்டம் வீரத்தளபதியின் சாதனைகளைக் கேட்டு பெருமை கொண்டாலும் இழந்துவிட்டோமே என்ற வேதனை அனைவரையும் ஓங்கி அறைந்தது.

இத்தனையையும் கடந்து தீபன் அண்ணையின் அஞ்சலி உரை முக்கிய கட்டம் ஒன்றை எட்டியிருந்தது. "ஓயாதஅலைகள்-03 நடவடிக்கை ஆரம்பமாகி ஆனையிறவு விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டுவிட்டது. நூற்றுக்கணக்கான சிங்களப் படைகள் கொல்லப்பட்ட களமுனையில் சிதறிக் கிடக்கிறார்கள். தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதற்காக சிங்களதேசம் உலகெங்கும் கையேந்திப் பெற்ற ஆயுதங்கள் வெடிமருந்துகள் என்றெல்லாம் ஆனையிறவு நிலங்கள் எல்லாம் பரவிக்கிடக்கின்றன. உண்மையில் அது சிங்களத்தின் மரணக் களமாகப் பூத்திருந்தது. சிங்களப் படைகளின் நிலைகள் காப்பரண்கள் எல்லாம் இடிந்தும் சிதறியும் மரணக்களத்தின் நீண்டதூரத்தைக் கடந்துவிட்டன.

"சிங்களதேசத்தின் உயிரற்ற பிணங்களை தாங்கிய அந்த நிலம் விடுதலை பெற்றிருந்தது" என்று தீபன் அண்ணை உரையாற்றிக்கொண்டிருக்க துயரத்தில் துவண்டவர்கள் அனைவரும் ஒருதடவை மீண்டெழுந்தனர். அனைவரது காதுகளும் முன்னரைவிட இன்னும் கூர்மையாகிவிட்டன. அடுத்தது என்ன சொல்லப் போகின்றார் என்ற எதிர்பார்ப்புடன் அனைவரும் தீபன் அண்ணாவின் முகத்தையும் அவரது வாயசைவையும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

"சண்டைகளின் உக்கிரத்தில் போராளிகள் முன்னேறிக்கொண்டிருந்தனர். சிங்களப் படைகள் திணறிக்கொண்டிருந்தன. பிரிகேடியர் பால்ராஜ் அண்ண இந்த நிலத்தின் மீட்புக்காக இத்தாவிலில் தரையிறங்கியிருந்தார். ஆனையிறவைக் கைப்பற்றியிருந்த எங்களுடைய போராளிகள் இத்தாவில் தரையிறங்கியிருக்கும் பால்ராஜ் அண்ணாவின் அணியுடன் சென்று இணையவேண்டும். தொடர் சண்டை. பளை வரைக்கும் சிங்களப் படைகளைக் கலைத்துவிட்டோம். தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருத களத்தில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டுவிட்டது." என்று சொல்ல மண்டபம் அமைதியால் நிறைந்தது.

- அ.லோகீசன்.

No comments:

Post a Comment